கற்பு குறித்த கருத்து: மேட்டூர் கோர்டில் நடிகை குஷ்பு வழக்கு பிப்ரவரி 8 ந் தேதிக்கு தள்ளிவைப்பு
மேட்டூர்: பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதிக்கு மேட்டூர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.என்று கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கு விசாரணைக்காக கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நேரில் நடிகை குஷ்பு ஆஜரானார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தபோது, ஒரு கும்பல் அழுகிய தக்காளி மற்றும் முட்டைகளை குஷ்பு மீது வீசியது. இதுகுறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பா.ம.க. சார்பில் ஆஜரான வக்கீல்கள் பிரபாகரன், சதாசிவம், முருகன் ஆகியோர் குஷ்பு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானால் தள்ளுமுள்ளு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முற்று பெறாததால் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications