ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை, இல்லையெனில் வெளியில் வர முடியாது.. கர்நாடக புகழேந்தி வார்னிங்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாக குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அதிமுக அம்மா கட்சியின் புகழேந்தி எச்சரித்துள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாக குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அதிமுக அம்மா கட்சியின் புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் அவர் வெளியில் நடமாட முடியாது என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் சாடினார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்ககோவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைக்க அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என்று மிகப் பெரிய தலைவர்களின் படங்களை வைத்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது சட்டவிரோதமானது. குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பது தவறான முன்னுதாரணமாகும்.
ஜெ. படத்துக்கு எதிர்ப்பு
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைத்தால், காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வரும். அதை இப்போதே தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
புகழேந்தி கண்டனம்
அவரது இந்த பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக அம்மா கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனு அவர் கண்டனம் தெரிவித்தார்.
வெளியில் வரமுடியாது
அவர் மேலும் பேசியதாவது, ஜெயலலிதாவை கடுமையாக தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
அரசியல் நாகரீகம்
அவரது கட்சித் தலைவர் சோனியா, ராகுலை பற்றி ஜெயலலிதா எந்த இடத்திலும் அநாகரீகமாக விமர்சித்தது கிடையாது. எனவே அரசியல் நாகரீகம், பண்பாட்டை காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாவடக்கம் தேவை
அவரது தாயார் சுலோசனா சம்பத் மறைந்த போது அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா அங்கிருந்த இளங்கோவனிடம் மனமாச்சரியங்களை மறந்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார். அந்த நாகரீகம், பண்பாடு மரியாதை எதுவுமே இளங்கோவனிடம் இல்லை. எனவே இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை. இவ்வாறு புகழேந்தி கூறினார்.