இங்கேயே இருங்க.. எங்கேயும் போகாதீங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு
சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சென்னை: சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்துள்ள அதிமுக, தற்போது தனது கட்சி எம்.எல்.ஏக்களை சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாம்.
முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் அகால மறைவைத் தொடர்ந்து சசிகலா படு வேகமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டார். முதலில் போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலா குடும்பத்தினர் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அடுத்து ஜெயலலிதாவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார். ஜெயலலிதா போலவே கெட்டப்பையும் மாற்றினார். ஜெயலலிதா போலவே நடக்கிறார், போஸ் கொடுக்கிறார், நிறுத்தி நிதானமாக பேசுகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா போலவே அழர் வகித்து வந்த முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார். இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டது அதிமுக. தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிராக இருந்தும் கூட தங்களுக்குரிய சட்ட அதிகாரத்தை வைத்து சசிகலாவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.
இந்த நிலையில் அடுத்தடுத்த வேலைகளில் சசிகலா தரப்பு இறங்கி விட்டது. முதல் கட்டமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை போடப்பட்டுள்ளதாம். சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். அவர்களை கண்காணிப்பில் கட்சி மேலிடம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா எதிர்ப்பாளர்களால் கட்சி பிளவுபடலாம் என்று ஏற்கனவே செய்திகள் பரவியுள்ள நிலையில் முதல்வராகும் வரை எந்தக் குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால்தான் இந்த உத்தரவாம். இதனால் சென்னையிலேயே தங்கியுள்ளனராம் எம்.எல்.ஏக்கள்.












Click it and Unblock the Notifications