தடபுடல் கறிவிருந்து… தஞ்சாவூரை அதகளப்படுத்தும் அ.தி.மு.க.!
தஞ்சை இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினருக்கு தடபுடல் விருந்து பரிமாறப்படுகிறது
தஞ்சை: தஞ்சை சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினருக்கு தினமும் கறிகுழம்பு, மீன்குழும்பு, மீன் வறுவல், முட்டை என தடபுடல் விருந்து பரிமாறப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் நடக்கவிருந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளான அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இப்போது 6 மாதங்களுக்கு பின்பு அங்கு தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சரின் ஆட்கள் என ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி அதிமுக வேட்பாளர் ரெங்கசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியினர் தஞ்சை சுற்றுச்சாலையில் உள்ள எஸ்என்எம் கிரீன்சிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உள்ளே அபார்ட்மென்ட் ஒன்றை மொத்தமாக வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். விருந்து நடக்கும் இடத்துக்கு அருகிலேயே ஒரு பெரிய ஷெட் அமைத்து அங்கே 3 வேளையும் தடபுடலாக சமையல் நடக்கிறது. தேர்தல் விதி மீறல்களில் சிக்கக்கூடாது என்பதற்காக 'கிரீன்சிட்டி மெஸ்' என வெளியே பேனர் தொங்க விடப்பட்டுள்ளது.
இங்கு தேர்தல் பணியாற்றும் அதிமுகவினர் 3 வேளைக்கு தரப்படும் டோக்கனை பெற்றுக் கொண்டு சாப்பிட்டு செல்லலாம். அதுவும் 3 வேளையும் அசைவத்துடன் உணவு பரிமாறப்படுகிறது. நேற்று முன்தினம் மட்டன் பிரியாணி, கோழிகறி குருமா, சிக்கன் 65 என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. நேற்று கறிகுழம்பு, மீன்குழம்பு, மீன் வறுவல், முட்டை, கறி, குருமா என நூற்றுக்கணக்கான அதிமுகவினர் சாப்பிட்டு சென்றவண்ணம் இருந்தனர். சமையல் செய்வதற்கு தனி டீமாம். இலை எடுக்க, பாத்திரம் கழுவ என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனராம். அதிமுகவினரின் இந்த தடபுடல் விருந்து எப்படி தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் போனது என்பதும் வியப்பாக உள்ளது