சசிகலா பொதுச்செயலராக எதிர்ப்பு- ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த அதிமுக தொண்டர்!
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததற்கு அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் மேடையே ஏறாத சசிகலா அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த சுவாதி ஆனந்த் என்ற அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.