”234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற உழைப்போம்” - மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிக்கு உழைப்போம் என்று அ.இ.அ.தி.மு.க மாணவரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன், தலைமை நிலைய செயலாளர் அமைச்சர் பழனியப்பன், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் அமைச்சர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமல கண்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், "வரலாறு காணாத கனமழையால் தமிழகத்தில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகள் மழை, வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். முதல்வர் தலைமையிலான கழக அரசால் அசுர வேகத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் துயரங்களை போக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மறு சீரமைக்கவும் மத்துய அரசு தமிழக அரசுக்கு தேவையான 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கவும், வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 19 ஆயிரத்து 100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக உடனடியாக வழங்க வேண்டும்.
பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது ‘‘ஜல்லிக்கட்டு'' நடத்தப்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று அவர்களின் வழிநின்று மத்திய அரசை வலியுறுத்தியும், முந்தைய மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது தமிழர்களின் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டினை" தடை செய்யும் வரை வாய் திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது.
2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெறவும், தமிழகத்தின் முதல்வராக 6ஆவது முறையாக மீண்டும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்கும் வகையில் தமிழ் நாடெங்கும் இரவு, பகல் பாராமல் மாணவரணி தேர்தல் களப் பணியாற்றுவது" ஆகியவை நிறைவேற்றப்பட்டன.