ஜெ.பூரண குணம் பெற வேண்டி.. அப்பல்லோவில் 68 பூசணிக்காய் உடைத்த அதிமுகவினர்!
ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 68 பூசணிக்காய்களை உடைத்து அதிமுகவினர் வழிபாடு நடத்தினர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைய வேண்டிய அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 68 பூசணிக்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெறவேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு வேளாங்கண்ணி மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டது. அப்போது முதல்வர் உடல் சுகமடைய வேண்டி ஆராதனை பாடல்களும் பாடப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று, விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டி அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே 68 பூசணிக்காய்களை உடைத்து அதிமுகவினர் வழிபாடு நடத்தினர்.