என்ன செஞ்சீங்கன்னு கேட்ட பொதுமக்களை இரும்புக் கம்பியால் வெளுத்தெடுத்த அதிமுகவினர்!
புதுக்கோட்டை: அடிப்படை வசதிகள் என்ன செய்து கொடுத்தீங்க என்று கேள்வி கேட்ட பொதுமக்களை இரும்பு கம்பியால் அடித்து துவைத்துள்ளார் புதுக்கோட்டை நகராட்சியின் அதிமுக கவுன்சிலர் செல்வம்.
புதுக்கோட்டை நகராட்சியின் 9 வது வார்டு கவுன்சிலராக உள்ளார் அதிமுகவைச் சேர்ந்த செல்வம். இந்த வார்டுக்கு சொந்தமான அம்பாள்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் செல்வத்தின் வீட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கவுன்சிலரிடம், "இந்த வார்டுல ஜெயிச்சு மக்களுக்கு என்ன செஞ்சீங்க; ரோடு இல்லை; குடிக்க தண்ணீர் வாரம் ஒரு முறை தான் வருது" என்று கேள்வி கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக கவுன்சிலர் செல்வமும், அவருடைய அடியாள் சம்மாயியும் இரும்பு கம்பியை எடுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 45 வயதான சாந்தார், சரவணன் (42), ஸ்ரீதர் (18), அழகர் (46), பழனிவேல் (35) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, ரத்த காயத்துடன் இந்த 5 பேரையும் அவர்களது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி மட்டும் செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகாயத்தோடு சென்றவர்களுக்கு வெறும் முதலுதவி மட்டும் செய்துவிட்டு, வீட்டிற்கு அனுப்புவதை பாதிக்கப்பட்டவர்கள் ஏற்க மறுத்தனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், இதற்கு மருத்துவமனை மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை கவுன்சிலருக்கு சார்பாக நடந்து கொள்வதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் உறவினர்களும் மருத்துவமனைக்கு எதிராகவும் இரும்பு கம்பியால் தாக்கிய கவுன்சிலர் செல்வம் மற்றும் அவரது அடியாள் சம்மாயி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.