ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்.. அதிமுக, திமுக, பாஜக, சிபிஎம் உள்பட 34 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தாக்கலான வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட மொத்தம் 34 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 19ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்பாளர்கள் சார்பில் அந்தந்த அரசியல் கட்சி பிரநிதிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். வேட்பு மனு தாக்கல் செய்த வரிசையின் அடிப்படையில் ஒவ்வொரு மனுவாக பரிசீலிக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர் வளர்மதி மற்றும் திமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோரது மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது எல்லா ஆவணங்களும் சரியாக, முழுமையாக இருந்தன. அவர்களது மனுக்கள் மீது யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இவர்களின் மனுக்கள், தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேபோல பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. பாஜக வேட்பாளரின் மனு தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது. இறுதியில் அதுவும் ஏற்கப்பட்டது.
இறுதியில், மொத்தம் தாக்கலாகியிருந்த 46 மனுக்களில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 34 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன.
ஜனவரி 30ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்றைய தினம் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.