“நான் பேசியது புண்பட்டிருந்தால்”: அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்த அதிமுக மா.செ!
கள்ளக்குறிச்சி: அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு, நீதிமன்ற உத்தரவு காரணமாக அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக சார்பில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி நகர திமுக சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுருவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் அதிமுக மாவட்ட செயலாளர் உருவப்படத்தை எரித்தனர். மேலும், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் காவல் நிலையத்தில் குமரகுரு மீது புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் குமரகுரு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அரசியல் உள் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவித்து கொண்டார் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இதற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெற்று ஒரு பொதுக்கூட்டத்தின் கூட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன்பின்னர் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு, நீதிமன்ற உத்தரவுப்படி அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய குமரகுரு, பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோர நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்த நிலையில் மன்னிப்பு கேட்டார்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற அதிமுக மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, "முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன். இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications