அதிமுக முன்னாள் எம்.பி. சேலம் பி.கண்ணன் காலமானார்
சேலம்: அதிமுக முன்னாள் எம்.பி. சேலம் பி.கண்ணன் (78) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
சேலம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பி.கண்ணன். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் விசுவாசத்தைப் பெற்ற அவர், 1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி. ஆனார். 1980 -ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கண்ணன், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார்.
மேலும், ஜெயலலிதா பேரவையைத் தொடங்கக் காரணமாக இருந்தார். பின்னர், அதிமுகவில் இருந்து விலகி திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பி.கண்ணன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் காலமானார்.
இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சுதா மற்றும் ப்ரியா என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 11 மணிக்கு மேல் மரவனேரி பகுதியில் உள்ள காக்காயன் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications