நடிகை ராதாவால் என் கணவர் உயிருக்கு ஆபத்து: அதிமுக நிர்வாகியின் மனைவி புது புகார்
சென்னை: நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக நிர்வாகி ஒருவரின் மனைவி போலீசில் புது புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாகத்தை சேர்ந்தவர் உமாதேவி. அதிமுக நிர்வாகி முனிவேல் என்பவரின் மனைவி. அவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதா மீது புகார் அளித்தார்.
ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தருமாறு அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
விசாரணை
உமாதேவியின் மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் அது குறித்து விசாரணை நடத்த தியாகராய நகர் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்த புகாரால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு உமா மீண்டும் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து
தியாகராய நகர் துணை கமிஷனர் சரவணனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் உமாதேவி. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நடிகை ராதாவால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் உடனே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல்
நடிகை ராதா தனக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக உமாதேவி தெரிவித்திருந்தார். மேலும் அடிக்கடி போன் செய்து தன்னையும், தனது மகளையும் ராதா மிரட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ராதா
உமாதேவி அடுத்தடுத்து இரண்டு புகார் மனுக்களை போலீசாரிடம் அளித்துள்ளார். இருப்பினும் ராதா இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.