டிச. 24-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு? பொதுச்செயலராகிறார் சசிகலா!
அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 24-ந் தேதி கூட்டப்படலாம் என தெரிகிறது. அக்கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளாக டிசம்பர் 24-ந் தேதியன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் புதிய பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தம்மை பொதுச்செயலராக்க முயற்சிக்கிறார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தருகின்றனர். ஆனால் தொண்டர்கள் எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 21 அல்லது 24-ந் தேதி கூட்டப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 24-ந் தேதி அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாள் என்பதால் அந்த நாளில் பொதுக்குழு கூட்டப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.
இப்பொதுக்குழு சென்னை, மதுரை அல்லது கொடநாட்டில் கூட்டப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதில் அதிமுகவின் புதிய பொதுச்செயலராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.