வீடுகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக் கடைகளையும் மூட அரசு திட்டம்?
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா முதல் கட்டமாக 500 மதுக் கடைகளை மூடவும், கடை நேரத்தை குறைக்கவும் நேற்று உத்தரவிட்டார். ஆனால் மூடப்பட வேண்டிய கடைகள் பட்டியலில் மேலும் பல நூறு கடைகள் இருப்பாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டாஸ்மாக் சார்பில் அரசிடம் ஏற்கனவே அறிக்கை கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருந்து 500 கடைகளை முதல் கட்டமாக அரசு மூட விருப்பதாகவும் டாஸ்மாக் சார்பில் சொல்லப்படுகிறது.
இந்தப் பட்டியலில் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள கடைகளின் பட்டியலும் அடக்கமாம். எனவே இந்தக் கடைகளும் படிப்படியாக மூடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எந்தெந்த கடைகள் மூடப்படும்?
முதல் கட்டமாக மூடப்படவுள்ள 500 கடைகளும் நகர்ப்புறத்தில் உள்ள கடைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் நகர்ப்புறங்களில் அதிக அளவில் கடைகள் உள்ளன. எனவே முதலில் அவற்றில் கை வைக்க ஜெயலலிதா முடிவெடுத்துள்ளாராம்.

நெருக்கமாக உள்ள கடைகள்
பக்கத்து பக்க்தில் உள்ள கடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அருகருகே உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுமாம். அதுபோன்ற கடைகள்தான் இந்த 500 கடை பட்டியலில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாம்.

கிராமப்புறங்களில் கடைகள் குறைவு
டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறுகையில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கடைகள் குறைவு. எனவேதான் முதலில் நகர்ப்புற கடைகளில் இந்த நடவடிக்கையை அரசு எடுப்பதாக தெரிகிறது என்றார்.

குடியிருப்புகள்
குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம். அவற்றையும் மூட அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது என்றனர்.

500க்கு மேல் வருமாம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இதுபோன்ற கடைகளை ஏற்கனவே பட்டியல் போட்டு அரசிடம் கொடுத்து விட்டனராம். இதில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளனவாம். எனவே படிப்படியாக மீதமுள்ள கடைகளும் கூட மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் 2வது கட்டம்
அனேகமாக ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இரண்டாம் கட்ட நடவடிக்கையை (கடைகள் மூடலை) முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.












Click it and Unblock the Notifications