சினிமா துறையைப் பாதுகாப்பதே அதிமுக அரசுதான்- அமைச்சர் கடம்பூர் ராஜு
சென்னை: அதிமுக அரசுதான் சினிமாத்துறையை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
கூடுதல் வரி விதித்து தமிழக அரசு சினிமாத் துறையை கொடுமைப்படுத்துவதாக திரையுலகினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். புதுப்பட வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதோடு, தியேட்டர்களையும் மூடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டியில், "வாட் வரி வந்த நேரத்தில் விலக்கு அளித்தவர் ஜெயலலிதா.
30 சதவீத கேளிக்கை வரி உள்ளூர் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
முன்னர் நடைமுறையில் இருந்த கட்டணம் குறைவாக இருந்தாலும், மக்கள் அதிக விலை கொடுத்துதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலையே தற்போது நிர்ணயம் செய்திருக்கிறோம்.
திரையரங்க உரிமையாளர்கள்தான் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரி உள்ளது. அப்படி பார்த்தால் தமிழகம் தான் திரைத்துறைக்கு வரிவிலக்கு, மானியம் உட்பட பல்வேறு சலுகைளை வழங்கி வருகிறது.
சிவாஜி மணிமண்டபத்தின் உள்ள சிவாஜி நிலையிலிருந்து அகற்றிய கருணாநிதியின் பெயரை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும் என்ற நடிகர் சங்கத்தின் கோரிக்கை நிச்சயம் ஏற்றுகொள்ளப்படாது. முன்னரே சரியான இடத்தில் வைக்காமல் அகற்ற காரணமாக இருந்ததே திமுக அரசுதான்," என்றார்.