ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
ஜாமீனில் விடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், ஜெயலலிதா பிரபலமான அரசியல் தலைவர். அவரை இப்போது வெளியே விட்டு விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. அவர் சாட்சிகளைக் கலைக்க முயலலாம் என்றும் டிவிஏசி கூறியுள்ளது அதிமுக தரப்பை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் டிவிஏசி இப்படி ஒரு கடுமையான அபிடவிட்டைத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பும் கூடியுள்ளது. இந்த அபிடவிட்டானது ஜெயலலிதாவுக்கு எதிராக பாதகமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

புதன்கிழமை மனு தாக்கல்
நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா பெஞ்ச் முன்பு டிவிஏசி தனது அபிடவிட்டைத் தாக்கல் செய்தது.

ஜாமீன் கூடாது.. தண்டனைய நிறுத்தக் கூடாது
அதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. அவர் பிரபலமான அரசியல் தலைவர்.

வெளியே விட்டால் பிடிக்க முடியாது
அவரை வெளியே விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. மேலும் சாட்சிகள் கலைக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை சஸ்பெண்ட் செய்யவும் கூடாது என்று டிவிஏசி கூறியுள்ளதாம்.

பவானி சிங்கையும் டிவிஏசிதான் நியமித்தது
அதை விட ஆச்சரியமாக கீழ் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்ட பவானி சிங்கை, தனது தரப்பு சிறப்பு அரசு வக்கீலாகவும், டிவிஏசி நியமித்துள்ளது. இதற்கான உத்தரவையும் அது வழங்கியுள்ளது. டிவிஏசியின் அபிடவிட்டையும் பவானி சிங்தான் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கடமையைத்தான் செய்துள்ளது டிவிஏசி
ஜெயலலிதாவுக்கு எதிராக டிவிஏசி செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் கூட டிவிஏசி இப்படித்தான் செய்தாக வேண்டும். காரணம், இது தமிழக அரசின் கீழ் செயல்பட்டாலும் கூட இதன் கடமையிலிருந்து தவற முடியாது என்பதால், இந்த ஆட்சேபனை மனு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

வழக்குப் போட்டதும் டிவிஏசிதான்
மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டிவிஏசிதான் வழக்குகளைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications