பலே வெள்ளையத்தேவா.. தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டும் கொங்கு மண்டலம்.. செங்க்ஸ் சிக்னல்!
டிடிவி தினகரன் கட்சியில் நீடிப்பாரா இல்லையா என்பதை முதல்வர் முடிவெடுப்பார் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது கொங்கு மண்டலமே தினகரனுக்கு எதிராக திரள்வதை உணர்த்துகிறது.
சென்னை: திஹாரில் இருந்து தினகரன் வெளியே வந்த உடனே பரபரப்பு பற்றிக்கொண்டது. அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நான் நீடிக்கிறேன் என்று தினகரன் கொளுத்திப்போட... அதை முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சொல்ல பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.
டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுங்கச் சொன்னதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் தங்கமணிதான். மின்சாரமும், உள்ளாட்சித்துறையும் இணைந்துதான் போர்க்கொடி உயர்த்தினர்.
சித்திரை முதல்நாள் டிடிவி தினகரன் வீட்டில் நடந்த கூட்டத்தில் வேலுமணி உயர்த்திய உஷ்ணக்குரல் இப்போதும் தினகரன் காதுகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறதாம்.

வேலுமணி வீட்டில்
தோதாக இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸ் நெருக்கடி கொடுக்கவே உடனடியாக எஸ்.பி வேலுமணி வீட்டில் கூடிய அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

கோஷ்டி கூட்டம்
தினகரனும் திஹார் சிறைக்கு செல்லவே, அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சர்வ சுதந்திரமாக கட்சிப்பணிகளை செய்தனர். அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக அவ்வப்போது செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் போட்டு நேரில் சந்தித்து பேசினர்.

மீண்டும் தொடர்வேன்
இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் அதிரடியாக தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். என்னை யாரும் நீக்கவுமில்லை, ஒதுக்கவுமில்லை. நானாக சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டேன். மீண்டும் அதிரடியாக கட்சிப்பணிகளை கவனிப்பேன் என்று கூறியுள்ளார்.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கிறார். அவருக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு எதிராக உள்ளனர். இதை உறுதிபடுத்தும் விதமாகவே செங்கோட்டையன் பேசியுள்ளார்.

முதல்வர் முடிவு செய்வார்
டிடிவி தினகரன் கட்சி பணியாற்றுவாரா இல்லையா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் செங்கோட்டையன் எப்போதுமே தினகரனுக்கு ஆதரவாக பேசியவர்தான். அவரே இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறியுள்ளார்.

கோஷ்டிகள் பலவிதம்
அதிமுகவில் தற்போது சசிகலா கோஷ்டி, எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி, டிடிவி தினகரன் கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி என பல கோஷ்டிகள் பிரிந்துள்ளன. டி.டி.வி தினகரன் ஜாமீனில் வெளி வந்தாலும் முன்பு போல அவரால் கட்சி பணியாற்ற முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications