ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சதி.. நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சட்டத்தை மீறாமல் எங்கும் தங்கி இருக்க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது என்றும் ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாகவும் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சதி நடப்பதாக நாடாளுமன்ற அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரு தினங்களாக கூவத்தூர் சென்று பேசி வந்த சசிகலா, நேற்று இரவு முதல் அங்கேயே தங்கியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இன்று மாலை ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளோம். எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதனால் இங்கு தங்கியுள்ளோம். எம்.எல்.ஏக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.
சட்டத்தை மீறாமல் எங்கும் தங்கி இருக்க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சிலர் சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.