திருவாரூரில் அதிமுக பிரமுகர், மகன் குண்டர் சட்டத்தில் கைது
திருவாரூர்: திருவாரூரில் கொலை மற்றும் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர், அவரது மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், தப்பளாம்புளியூரைச் சேர்ந்தவர் ராமன். அவர் திருவாரூர் அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். சட்ட விரோதமாக மணல் அள்ளுவதில் அவருக்கும், அதே ஊரை சேர்ந்த வரதராஜன், கலைச்செல்வம் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ராமனும், அவரது ஆதரவாளர்களும் வரதராஜன் மற்றும் கலைச் செல்வத்தை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில் வரதராஜன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கொலை வழக்கில் ராமனும், அவரது மகன் சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ் குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து ராமன், சுரேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.