அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர்: கதறிய திமுக, பாஜக
நாகர்கோவில்: அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி திமுக வேட்பாளர் அன்பழகன் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
குமரியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள எஸ்.என்.பி. பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேக்கா மண்டபத்தில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே ஒரு வாக்குக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள் அதிமுகவினர். அதிகாரிகள் இதை பார்த்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். குமரியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றார்.
அன்பழகன்:
திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் திருச்சி மேலப்புதூரில் உள்ள கான்வென்ட் பள்ளியில் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிவிக்க சென்றால் அங்கு திருச்சி கலெக்டரோடு அமைச்சர் பூனாட்சி, சிவபதி, தொழில் அதிபர் செல்வராஜ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றதும் கலெக்டரிடம் திருச்சி ராணுவ காலனியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்று கூறினோம். அவரோ எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்குமாறு கூறியதால் எழுதிக் கொடுத்தோம். அதிமுகவினர் திருச்சி தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டனர். புகார் கொடுத்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்கள் என்ன தான் பணம் கொடுத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications