ஈரோட்டில் இளங்கோவனின் படத்தை கழுதை மீது வைத்து அதிமுகவினர் ஊர்வலம்
ஈரோடு: ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் படத்தை கழுதைகள் மீது வைத்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்தை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளங்கோவனின் புகைப்படத்தை செருப்பு, துடைப்பத்தால் அடிப்பது, படத்திற்கு தீ வைப்பது, அவரின் உருவ பொம்மையை எரிப்பது என்று அதிமுகவினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் மற்றும் மாநகர அதிமுக சார்பில் மூலப்பட்டறை ரோட்டில் இருக்கும் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வ.உ.சி. பூங்கா அருகில் இருக்கும் ஆக்ஸ்போர்டு ஹோட்டல் முன்பு அதிமுகவினர் குவிந்தனர்.
2 கழுதைகள் மீது இளங்கோவனின் படத்தை வைத்து ஊர்வலமாக கிளம்பினர். மேலும் இளங்கோவனின் உருவபொம்மையை பாடையில் வைத்து தூங்கிச் சென்றனர். இதற்கிடையே காங்கிரஸ் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிடுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்லும் வழியின் இருபுறமும் பேரிகார்டு வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஊர்வலமாக வந்த அதிமுகவினர் காங்கிரஸ் அலுவலகத்தை அடையவிடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டு அவரின் உருவ பொம்மையை எரித்துவிட்டுச் சென்றனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் வெளியே வந்ததை பார்த்த அதிமுகவினர் அவர்களை மிரட்டினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications