சுப்ரீம் கோர்ட்டாவது 'அம்மா'வுக்கு ஜாமீன் கொடுக்கட்டும்: அதிமுகவினர் அங்கபிரதட்சனம்
வேலூர்: ஜெயலலிதா விடுதலைக்காக அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியினர் தக்கோலம் ஸ்ரீஜலநாதீஸ்வரர் கோவிலில் அங்கபிரதட்சனம் செய்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலையாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் நடத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட அரக்கோணம் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியினர் தக்கோலத்தில் உள்ள ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீகிரிராஜகன்னிகாம்பாள் மற்றும் கோவிலின் விசேஷ மூலவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
அதன் பிறகு ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டி இளைஞர் அணியினர் அங்கபிரதட்சனம் செய்தனர். ஒன்றிய இளைஞரணி செயலாளரும், வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான ஏ.பி.எஸ்.லோகநாதன் தலைமையில் நடந்த இந்த அங்கபிரதட்சன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தேவையில்லாத பாயிண்ட்களை ஜெயலலிதாவின் சட்டக்குழு எடுத்து வைத்ததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போய்விட்டது என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications