அமாவாசையில் பேச்சுவார்த்தை... அட்சய திருதியையில் இணைப்பு - ஓபிஎஸ் - ஈபிஎஸ் முடிவு
அமாவாசை நாளான இன்று ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகளிடையே இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அட்சய திருதியை நாளில் இணைப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளிடையே இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் டிடிவி தினகரன் கைதை அடுத்து இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.
நேற்றிரவு இரண்டு அணிகளின் முக்கிய தலைவர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் அமாவாசை தினமான இன்று இரு அணிகளின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒபிஎஸ், எடப்பாடி அணிகளில் இருந்து தலா 7 பேர் பங்கேற்க உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையும் அணிகள்
அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணிகளை இணைக்க இரு அணி தரப்பிலும் 7 நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் குழுவினர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நிபந்தனை நிறைவேற்றம்
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணியின் பிரதான கோரிக்கை. அதே போல பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரகசிய பேச்சுவார்த்தை
அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வைத்திலிங்கம், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்றிரவு நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளனர்.
அமாவாசை
ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. புதன்கிழமையான இன்று நிறைந்த அமாவாசை, பிற்பகல் ராகுகாலம் முடிந்த பின்னர் புதன் ஓரையில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7 நபர் குழுக்கள்
இரு அணிகள் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுவினரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
முக்கிய முடிவுகள்
சசிகலா , தினகரன் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் 30 பேரை கட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறியிருந்தார். இந்த நிபந்தனை மேலும் முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது பேச்சு வார்த்தையின்போது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அட்சய திருதியையில் இணைப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது போன்ற மற்ற நிபந்தனைகளையும் ஓ.பன்னீர்செல்வம் அணி முன நிறுத்தியுள்ளது, இவற்றை ஏற்பதற்கு அ.தி.மு.க. அம்மா அணியினர் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அட்சய திருதியை நாளில் இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.