பால்குடம்... அக்னிச்சட்டி... தொடர்ந்து அல்லோகல்லப்படும் 'அம்மா பிரார்த்தனை'!
சென்னை: ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ... தேர்தலில் நிற்க சீட் கொடுத்து... அமைச்சராக்கி அழகு பார்த்த "அம்மா"வுக்காக தமிழ்நாட்டு அமைச்சர்கள் தற்போது செய்யும் ஒரே வேலை, கோயில் கோயிலாகப் போய் பிராத்தனைகளும், யாகங்களும், பூஜைகளும் செய்வதுதான். கூடவே உருளுகிறார்கள்.. அங்கப்பிரதட்சணம் என்ற பெயரில்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் முதல்வராக அரியணையில் அமரவேண்டும் என்பதுதான் அதிமுகவினரின் ஒரே கனவு, லட்சியம்.
இதற்காக எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். பால்குடம் எடுக்கிறார்கள், அக்னிச்சட்டி ஏந்துகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் இந்த வேண்டுதல்கள் பிராத்தனைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை இந்த பிராத்தனைகள் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

2025 பால்குடம்
அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்பி தலைமையில் செனாய் நகர் அருள்மிகு ஸ்ரீ மகாமேரு சக்ரபகவதி ஆலையத்திலிருந்து - பச்சையப்பன் கல்லூரி பின்புறம் அமைந்துள்ள வேம்புலி அம்மன் ஆலையம் ஆலையத்திற்கு 2025 பக்தர்கள் பங்கேற்றனர்.

வழக்கம் போல வளர்மதி!
பால்குட ஊர்வலத்தில் அமைச்சர் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, பழனியப்பன், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், நா.பாலகங்கா பங்கேற்றனர். அவர்களுடன் மாணவரணி, பிற அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அறுபடை வீடு தரிசனம்
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் திருச்செந்தூர், திருத்தணி, பழனி உள்பட அறுபடை வீடுகளிலும் தங்கத்தேர் இழுத்துவிட்டார். தனது தொகுதியான சாத்தூரில் பால்குடம், குத்துவிளக்கு பூஜைகளும் நடந்தன. பின்பு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் யாகங்கள் நடத்தினார்.

மிளகாய் யாகம்
சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அமாவாசை நாளில் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ‘பிரத்தியங்கரா தேவி' கோயிலில் சத்ருசம்ஹார யாகத்தில் பங்கேற்றார். அமாவாசை நாளில் இந்த யாகம் நடத்தினால், ‘அம்மா' ராசிக்கு விஷேசம் என்று ஜோசியர்கள் சொல்லவே கிலோ கணக்கில் மிளகாய் வாங்கி யாகம் நடத்தினாராம்.

அமைச்சர் வேலுமணி
கோவை பகுதியில் உள்ள அனைத்து கோயில்களையும் வலம் வந்துவிட்டார் அமைச்சர் வேலுமணி. கோவையில் இந்தக் கோயில் ரொம்ப சக்தி வாய்ந்ததாம் என அமைச்சர் காதுபட யாராவது சொல்லிவிட்டால் போதும், அடுத்த ஓரிரு நாட்களில் அந்தக் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டு விடுகிறது. அக்னிச்சட்டி ஏந்தி பிராத்தனை செய்து அசத்தியிருக்கிறார் வேலுமணி.

கால பைரவரா.. பழனியப்பனா!
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் எல்லா அமைச்சர்களையும் ஓவர்டேக் செய்துவிட்டார். தருமபுரி அதியமான் கோட்டை காலபைரவர் கோயிலில் மிகப்பெரிய யாக குண்டத்துக்கு முன்பு அமைச்சர் மூன்று மணிநேரம் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தார். இவர் பழனிய்பனா.. இல்லை கால பைரவரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஸ்டில் ஆகிக் கிடந்தார் மனிதர்.

மஞ்சா வேட்டி.. மஞ்சா துண்டு
மஞ்சள் வேட்டி, மஞ்சள் துண்டு சகிதமாக சட்டையைக் கழற்றிவிட்டு கோயில் பூஜைகளில் பங்கேற்கும் பழனியப்பன் கிட்டத்தட்ட ஒரு பூசாரிபோலவே மாறிவிடுகிறாராம்.

அன்னதானம், ஆடைதானம்
அமைச்சர்களைத் தவிர அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அன்னதானம், ஆடைதானம், யாகங்கள், குத்துவிளக்கு பூஜைகள் என நடத்தி அசத்தி வருகிறார்களாம். இவர்களின் பிராத்தனைகளினால் ஜெயலலிதா விடுதலையாகிறாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் சீட்டு கன்பார்ம் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications