அழகிரியே கூப்பிட்டும் போகாத போஸ்.. நன்றியுடன் நினைவு கூறும் திருப்பரங்குன்றம் அதிமுக
அழகிரி கூப்பிட்டும் ஏ.கே.போஸ் தனது கட்சியின் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்.
Recommended Video
திருப்பரங்குன்றம்: "எங்களுக்கு எல்லாமே அவருதாங்க. இந்த தொகுதியில செஞ்சிருக்கிற எல்லா நல்லதுக்கும் அவர்தாங்க காரணம்" என்று ஏ.கே.போஸ் பற்றி துக்கம் தொண்டை அடைத்துக் கொண்டும் கண்ணீர் விட்டும் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தொகுதியின் பல வளர்ச்சி திட்டங்களுக்கு மூலவேராகவும், ஆதி அந்தமாகவும் இருந்திருக்கிறார் ஏ.கே.போஸ் என்கிறார்கள். திருப்பரங்குன்றம் என்றாலே அது போஸ்தான் என்று அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நினைவில் வந்து போகக்கூடிய அளவுக்கு செல்வாக்காக திகழ்ந்திருக்கிறார் ஏ.கே.போஸ்.
ஒரு சமயம், ஓயாத கட்சி பணி மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக உடல்நலிவுற்று அரசியலிலிருந்து விலகி இருந்தார். வீட்டிலே ஓய்வு மட்டுமே அப்போது அவர் எடுத்து கொண்டிருந்தார். ஆனால் மற்ற கட்சிக்காரர்களோ, போஸ்-க்கு கட்சியில் ஏதோ பிரச்சனை போல. கருத்து வேறுபாடு ஆகிவிட்டது. அதனால்தான் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதால் வீட்டில் முடங்கி கிடக்கிறார் என்று தகவல்கள் மதுரை மாவட்டத்தை வலம் வந்தன. இது போஸ் காதுக்கு வந்து அவரும் கவலைப்பட்டார். தொண்டர்கள் எதையாவது பேசிவிட்டு போகட்டும் என்று அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்
என்னுடன் வந்துவிடு
ஆனால் திடீரென்று அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அது யார் என்றால், மதுரை மாநகரின் ஆஸ்தான முக்கிய புள்ளி மு.க.அழகிரிதான். வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த போஸிடம் அழகிரி கேட்கிறார், "என்னுடன் வந்துவிடு.. நாம் இணைந்து செயல்படுவோம். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே எடுக்கிறேன். முக்கிய பொறுப்புகளையும் உனக்கு வழங்குகிறேன்" என்று சொன்னாராம்.
ஜெ.விடம் வேதனை
அழகிரியின் வேண்டுகோளை அன்போடு மறுத்துள்ளார் போஸ். உடனடியாக மறைந்த ஜெயலலிதாவிடம் போனில் தொடர்பு கொண்டார், "உடல்நலமின்றி நான் வீட்டில் இருப்பதால் எனக்கும் கட்சிக்கும் ஏதோ பிரச்சினை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள், என்னை மாற்று கட்சிக்கார்களும் அழைக்கிறார்கள்" என்று வேதனைப்பட்டாராம். இதனை கேட்ட ஜெயலலிதாவோ, உடனடியாக சென்னைக்கு வருமாறு போஸை அழைத்தார். "மனம் வருந்த வேண்டாம் என்றும், விரைவில் நீங்கள் வெற்று எம்எல்ஏவாக வருவீர்கள்" என்று சொல்லி அனுப்பினார். சொன்னபடியே அப்போதைய தேர்தலில் எம்எல்ஏ சீட்டும் வழங்கினார்.
விஜயகாந்த் முரண்டு
அதுமட்டுமல்ல, 2011-ம் ஆண்டு தேர்தல். அதிமுக-தேமுதிக கூட்டணி உதயமானது. திருப்பரங்குன்றம் தொகுதிதான் வேண்டும் என்று விஜயகாந்த் ஒற்றைக்காலில் நிற்கிறார். காரணம், அங்கு தனக்கு நிறைய தேமுதிக தொண்டர்கள் உள்ளார்கள் என்பதால், அதுதான் வேண்டும் முரண்டு பிடிக்கிறார். வேரூன்றி நின்ற தன் ஆஸ்தான தொகுதியான திருப்பரங்குன்றத்தை தன் கட்சிக்காக, தன் கட்சி தலைவரின் விருப்பத்துக்கு மதிப்பளித்தும் விட்டுக் கொடுத்தார் போஸ். ஜெயலலிதா மதுரை வடக்கு தொகுதியை ஏ.கே.போஸ்-க்காக ஒதுக்கினார். இறுதியில் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பாக நிறுத்தப்பட்ட ஏகேடி ராஜாவும், வடக்கு தொகுதியில் நின்ற போஸும் அமோகமாக வெற்றி பெற்றனர்.
அதிமுகதான் எல்லாம்
இறுதிவரை அதிமுகவுடனே தன்னை இணைத்து கொண்டவர் போஸ். பிற கட்சியினர் தன் மீது நம்பிக்கை வைத்து அழைத்தும், தன் சுயநலத்துக்காக இல்லாமல் கடைசி வரை கொள்கை பிடிப்புடன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவே போஸ் மறைந்துபோனார் என்றும் தொகுதி மக்கள் சொல்லி பூரித்து போகின்றனர்.