அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மேலும் 2 நாட்களுக்கு "ஆடம்பர சிறை" - செங்கோட்டையன்
அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் இரண்டு தினங்கள் கூவத்தூர் ரிசார்ட்ஸ், பூந்தண்டலம் பண்ணை வீடுகளில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் மேலும் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் மேலும் 2 நாட்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருப்பார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். கடந்த 8ஆம் தேதி முதல் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒபிஎஸ் எழுப்பிய கலகக்குரல் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் ஒருவித நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்காளவே தமிழக அரசியல் களம் படு பரபரப்படைந்துள்ளது.
எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாயாமல் இருப்பதற்காக கடந்த 8ஆம் தேதி முதல் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசியமாக ஓபிஎஸ் அணியினர் பேசி வருகின்றனர். ஆளுநர் தாமதம் செய்து வருவதால் அனைவரும் ஓபிஎஸ் வசம் சென்று விடுவார்களோ என்ற அச்சம் சசிகலா அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களிடம் பேசினார் சசிகலா. செங்கோட்டையனை முதல்வராக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. இந்த தகவலை செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வாழ்ந்தாலும் அவரோடுதான் இருப்போம். எங்கள் உயிர்மூச்சு உள்ளவரை அவருடன்தான் இருப்போம். அவரை முதல்வராக அமரவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் செயல்படுகிறோம். உடனடியாக ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம் என்று கூறினார். எம்எல்ஏக்கள் இன்னும் 2 நாட்களுக்கு ரிசார்ட்டில் இருப்பார்கள் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.