இந்த "டுபாக்கூர்"ல போயாப்பா கும்மியடிச்சீங்க!!
அனுமதியே பெறாத கூவத்தூர் கோல்டன் பே ரிசார்டில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒரு வாரம் கூத்தடித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்ட கூவத்தூரில் கோல்டன் பே சொகுசு விடுதிக்கு அனுமதி பெறாதது தற்போது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதில் சசிகலாவுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஓபிஎஸ்ஸுக்கு 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது.
சென்னையிலோ அல்லது அவரவர் தொகுதியிலோ எம்எல்ஏ-க்களை உலவ விட்டால் அவர்களை எதிரணியோ அல்லது எதிர்க்கட்சியோ விலைக்கு வாங்கக் கூடும் என்று சசிகலா கருதினார். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்களுக்கு ஒரு வழியாக தோன்றியதுதான் கூவத்தூரில் உள்ள தங்கும்விடுதியில் அவர்களுக்கு "சகல" வசதிகளுடன் தங்க வைக்கும் முடிவு.
மொத்த அறைகளும் முன்பதிவு
அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து 56 அறைகளும் அதிமுக சார்பில் ஒரு டிராவல் ஏஜென்ட்டால் முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800 ஆகும். அதுமட்டுமல்லாது உணவு, மதுபானம் ஆகியவற்றுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சசிகலா தரப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் ரிசார்டில் தங்கியிருந்தனர்.
என்ன கூத்து
கூவத்தூரில் தங்கியிருந்த இவர்களுக்கு மது உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. குடித்துவிட்டு பாட்டில்களை புல்வெளியில் எறிந்ததும், அரை நிர்வாணத்துடன் சில எம்எல்ஏ-க்கள் டான்ஸ் ஆடியதும் ஒரே கூத்தாக இருந்தது. மேலும் உணவு பொருள்களை புல்வெளிகளில் சிந்தியிருந்தனர். இந்த ரிசார்டில் வெளியாட்கள் யாரும் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.
எஸ்பி முத்தரசியிடம் அக்கப்போர்
எம்எல்ஏ-க்கள் விடுதியில் தங்கியிருந்ததால் அவ்வழியாக அந்த ஊருக்குள் செல்ல நுழைய சசிகலாவின் அடியாட்கள் தடை செய்ததால் அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனால் சம்பவ இடம் விரைந்த போலீஸ் எஸ்பி முத்தரசி உள்ளிட்டோர் அதிகாரிகள் எம்எல்ஏக்களை விடுதியிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். எனினும் அவர்கள் காவல் துறை அதிகாரிகளையே கண்டபடி பேசினர்.
சசிகலாவும் கேம்ப்
தான் முதல்வராக போகும் கனவில் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களையும் பார்ப்பதற்காக கூவத்தூர் சென்ற சசிகலாவும் அங்கேயே தங்கிவிட்டார். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள ஊருக்குள் சகஜமாக சென்றபோது பேர் வைத்த குழந்தைக்கே பேர் வைத்த சம்பவங்களும் அரங்கேறின.
நம்பிக்கை வாக்கெடுப்பு
பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்ததால் எம்எல்ஏ-க்கள் ரிசார்டை காலி செய்ய நேரிட்டது. அப்போது சேவைக் கட்டணம், அறை கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீதி ரூ.50 லட்சத்தை பட்டையாக குழைத்து நாமம் போட்டது சசிகலா தரப்பு. அவர்கள் காலி செய்தவுடன் ரிசார்டை பராமரிக்கவே இரு நாள்களுக்கு ரிசார்ட் மூடப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எந்த அளவுக்கு நாறி போயிருக்கும் என்பதை.
விடுதிக்கு அனுமதி இல்லை
இந்நிலையில் இந்த எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த இந்த ரிசார்ட் முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரம் மீனவர் நலச் சங்கத்தினர் ஆர்டிஐ சட்டத்தின்படி கேள்வி எழுப்பினர். அதன் மூலம் இந்த விடுதியும் சட்டவிரோத கட்டடம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போயும் போயும் இதிலா
இந்த டுபாக்கூர் கட்டடத்தில் தங்கி இந்த டுபாக்கூர்களை என்னவென்று சொல்வது. அரசியல்வாதிகள் என்றாலே அது பழக்க தோஷமோ என்னவோ அவர்களுக்கென்று சட்டவிரோதமாகவே எல்லாம் அமைந்து விடுகிறது.