சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்களை அணி திரட்டுகிறாரா வைகுண்டராஜன்?
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை களமிறக்க தொழிலதிபர் வைகுண்டராஜன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா அடித்ததாக ராஜ்யசபாவில் பகிரங்க புகார் சொன்னதால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி எம்.பி. பதவியை தாம் ராஜினாமா செய்யப் போவதில்லை என திட்டவட்டமாக கூறி வருகிறார் சசிகலா புஷ்பா.
இதனிடையே சசிகலா புஷ்பா குடும்பம் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளன. இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையில் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏடாகூட வீடியோக்கள்
இந்த நிலையில் சசிகலா புஷ்பா, தமிழக அரசியலை திருப்பிப் போட்டுவிடுவேன் என ஜெயலலிதாவை மிரட்டியிருந்தார். அதாவது ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமானவர்கள் தொடர்பான ஏடாகூட வீடியோக்கள் தம் வசம் இருப்பதாலேயே சசிகலா புஷ்பா இப்படி பேசிவருவதாக கூறப்பட்டது.

வைகுண்டராஜனுக்கு செக்
அத்துடன் தொழிலதிபர் வைகுண்டராஜனின் 'பேராதரவு'தான் சசிகலா புஷ்பாவின் இந்த துணிச்சலான மோதலுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் திடீரென வைகுண்டராஜனுக்கு சொந்தமான விவி மினரல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்ட 3 டன் கனிம மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிமுக எம்எல்ஏக்களை களமிறக்குகிறார்
இருந்தபோதும் டெல்லியில் தமக்கு செல்வாக்கு இருப்பதால் தமது தொழிலை தமிழக அரசால் முடக்கிவிட முடியாது என்பது வைகுண்டராஜனின் திடமான நம்பிக்கையாம்.. மேலும் தமது தொழிலை முடக்க நினைக்கும் தமிழக அரசை கிடுகிடுக்க வைக்கும் வகையில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை களமிறக்கவும் வைகுண்டராஜன் வியூகம் வகுத்து வருகிறாராம்.

அசைக்க முடியுமா?
தற்போதைய சட்டசபையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வைகுண்டராஜனைப் பொறுத்தவரையில் ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்களை களமிறக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். தமிழகத்தில் ஆளூம் அரசின் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை. அதாவது அதிமுக ஆட்சியை அசைத்துப் பார்க்க 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டராஜனுக்கு தேவை. ஆனால் இத்தனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டராஜனை நம்பி போவார்களா என்பது கேள்விக்குறிதான்...

பரபரப்புக்கு பஞ்சமிருக்காது?
இருந்தபோதும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களையாவது ஜெயலலிதாவுக்கு எதிராக பேச வைப்பதில் வைகுண்டராஜன் தரப்பு தீவிரமாக இருக்கிறதாம். அனேகமாக 22-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications