'கோப்ராபோஸ்ட்' வீடியோவில் சிக்கிய அதிமுக எம்.பி கட்சிப் பதவியிலிருந்து நீக்கம்
சென்னை: கோப்ராபோஸ்ட் இணைய இதழ் நடத்திய ஆபரேஷன் பால்கன் கிளா எனப்படும் ஸ்டிங் நடவடிக்கையில் சிக்கிய அதிமுக எ்ம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜேந்திரனிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி, கூடுதலாக அமைச்சர் டி.எம். சின்னையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன், தென் சென்னை தொகுதி அதிமுக எம்.பியாக இருக்கிறார்.
கோப்ராபோஸ்ட் ஸ்டிங்
கோப்ராபோஸ்ட் இணைய இதழ் சில மாதங்களுக்கு முன்பு பால்கன் கிளா என்ற பெயரில் ஒரு ஸ்டிங் நடவடிக்கையை எடுத்தது. அதில், காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதாதளம், அதிமுக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க உதவுவதாக கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
சிட்லபாக்கம் ராஜேந்திரனும்
இந்த எம்.பிக்கள் பட்டியலில் சிட்லபாக்கம் ராஜேந்திரனும் இடம் பெற்றிருந்ததால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னொரு அதிமுக எம்.பி.
அதேபோல இன்னொரு அதிமுக எம்.பியான சுகுமார் என்பவரும் இதில் அடிபட்டார். இவர் பொள்ளாச்சி தொகுதி எம்.பியாவார்.
பதவி பறி்ப்பு
இந்த அம்பலம் வெளியான நிலையில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சிப் பதவி பறிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் எம்.பி., அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
சின்னையாவிடம் கூடுதல் பொறுப்பு
காஞ்சீபுரம், மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழக பணியினை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டி.கே.எம்.சின்னையா கூடுதலாக மேற்கொள்வார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
திருப்பூர் மா.செவும் நீக்கம்
திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழக பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை தலைவரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூடுதலாக மேற்கொள்வார் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.