எதுக்கு வந்தீங்க? இருக்கோமா? இல்லையான்னு பாக்க வந்தீங்களா.. தம்பிதுரையை வட்டம் கட்டிய மக்கள்!
திண்டுக்கல் அருகே தம்பிதுரையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
வேடசந்தூர்: இதுக்குத்தான் எலக்ஷன்ல ஜெயிச்சவங்க எல்லாம் அப்பப்போ தொகுதி பக்கம் வந்துட்டு போகணும்னு சொல்றது.
நம்ம ஜனங்க தெளிவா ஆயிட்டாங்க... எவ்வளவு தெளிவுன்னா... ஒரு எம்பியையே முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டு விடும் அளவுக்கு வந்துட்டாங்க. அவர் வேறு யாருமில்லை... மக்களவை துணை சபாநாயகரை தம்பிதுரைதான்!

வரவேற்பு இல்லை
கரூர் தொகுதி எம்.பி.யான தம்பிதுரை, தொகுதி மக்களின் குறைகளை கேட்கலாம் என்று திண்டுக்கல் மாவட்டம் பக்கம் வந்தார். காரணம், கரூர் தொகுதியின் சில பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. அதனால் வேடசந்தூர், அய்யலூர் போன்ற பகுதிகளுக்கு சென்றார். பிறகு வான்ராயன்பட்டி என்ற கிராமத்திற்குள் நுழைந்தார். ஆனால் அங்கெல்லாம் போதிய வரவேற்பு அவருக்கு இல்லை.

விழித்த தம்பிதுரை
தம்பிதுரையை சூழ்ந்து கொண்ட மக்கள், "காவிரி குடிநீர் கிடைச்சு 8 மாதமாயிடுச்சு. இங்க ஒரே ஒரு போர் தான் இருக்கிறது. எத்தனை முறை, புகார் பண்ணாலும் யாருமே கண்டுக்க மாட்டேன்கிறாங்க.. என்றனர். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழித்தார் தம்பிதுரை.

ஒரு ஒட்டு கிடையாது
பிறகு அங்கிருந்து வேங்கன்குறிச்சி கிராமத்திற்கு சென்றார். அவரை பார்த்ததும் அங்கிருந்த மக்கள் எல்லோரும் அவரை நோக்கி வந்தனர். வரவேற்பதற்காக இல்லை.. வறுத்தெடுக்கத்தான்!! "எதுக்கு இப்ப இந்த ஊருக்கு வந்தீங்க? நாங்க இருக்கோமா? இல்லையான்னு பாக்க வந்தீங்களா? சீக்கிரம் எலெக்ஷன் வரப் போகுதுன்னு, எங்களைப் பார்க்க வந்தீங்களா? ஏற்கனவே குடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேத்திட்டீங்களா? ஒரு ஓட்டு கூட போட மாட்டோம், பாத்துக்குங்க..என்றனர்.

மீட்டு சென்றனர்
இதன்பிறகு தம்பிதுரையுடன் இருந்த நிர்வாகிகளும், அதிகாரிகளும் மக்களிடமிருந்து அவசர அவசரமாக அவரை மீட்டு கொண்டு சென்றனர். இப்படி போன இடத்திலெல்லாம் தம்பிதுரையை மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.












Click it and Unblock the Notifications