அதிமுகவுக்கு தினகரன் தலைமையா.. இதெல்லாம் ரொம்ப காமெடிங்க.. சசிகலா புஷ்பா நக்கல்!
அ.தி.மு.க.வுக்கு தினகரனை தலைமை ஏற்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என சசிகலா புஷ்பா எம்.பி. கூறியுள்ளார்.
மதுரை: அ.தி.மு.க.வுக்கு டிடிவி தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது என ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரண்டாக பிளவுபட்டு கிடந்த அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக சிதறிக்கிடக்கிறது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையததிற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள தினகரன் மீண்டும் கட்சிப் பணியாற்ற போவதாக கூறியுள்ளார்.

ஆனால் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். இதனிடையே டிடிவி தினகரனை அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க.வுக்கு டிடிவி தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா புஷ்பா எம்.பி. இன்று மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை தருகின்றனர். அவர்கள் உண்மை தன்மையை அறிய வேண்டும்.
அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களும் பதவியை தக்க வைத்துக் கொள்ள சசிகலா வெளியில் இருந்த போது சின்னம்மா என்பதும், சிறையில் இருக்கும் போது தூக்கி எறிந்து பேசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் சிரிக்கிறார்கள். மீதி உள்ள 4 வருட ஆட்சியிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு டிடிவி தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications