ஊழல், நடவடிக்கை.. ஜெ. நடத்தும் திட்டமிட்ட திசைதிருப்பல் நாடகம், ஏமாறாதீர்கள்: வைகோ
திருச்சி: அதிமுகவில் திட்டமிட்டு நாடகம் நடத்தப்படுவதாகவும், அதை நம்பி வாக்காளர்கள் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர், புறநகர், திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட நிர்வாகிகளிடம் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து வைகோ ஆலோசனை நடத்துகிறார். இதனை முன்னிட்டு திருச்சி சென்றுள்ள வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், மக்கள் நலக் கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. நடுநிலை வாக்காளர்கள், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பதிவிடும் இளைஞர்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
அதிமுகவில் திட்டமிட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா, மக்கள் கவனத்தை திசை திருப்ப நாடகம் நடத்துகிறார். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல மக்களை நம்ப வைக்கிறார்.
அடித்த கொள்ளையில் கமிஷன் கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கையா? அதிமுகவில் எல்லாம் மூடு மந்திரமாக இருக்கிறது. இதைப்பார்த்து மக்கள் ஏமாறக்கூடாது என்றார் வைகோ.
அண்ணாதுரை, காமராஜர்,ராஜாஜி ஆகியோர் தமிழகத்தின் பெருமையை இந்தியா முழுவதும் பறைசாற்றினார்கள். ஆனால் அதிமுக அரசே இந்தியாவில் ஊழல் மலிந்த மாநிலமாக மாற்றியுள்ளது.
இதற்கு மாற்று என்று கூறிக்கொள்ளும் திமுகவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. வாக்காளர்கள் இரண்டு ஊழல் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சாலையில் போகிற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பள்ளி மாணவர்கள் முதல் பெண்களும், சிறுவர்களும் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர்.
சங்கர் கொலையை தடுக்க தமிழக அரசு தடுத்து விட்டது. போலீஸ் நினைத்திருந்தால் தலித் இளைஞரின் கொலையை தடுத்திருக்க முடியும். சங்கர் கொலையை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஊழலற்ற, மதுவற்ற ஆட்சியை தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே அளிக்க முடியும் என்றும் வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications