லோக்சபா தேர்தல்: தேமுதிகவை தனித்துப் போட்டியிட வைக்க அதிமுக 'திடீர்' முயற்சி?
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிகவை எப்படியாவது தனித்துப் போட்டியிட வைப்பது என்ற முயற்சியில் அதிமுக திடீரென தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக சேருகிறது... காங்கிரஸ் கட்சி தேமுதிகவுக்கு தொடர்ந்தும் வலைவீசிக் கொண்டிருக்கிறது.. தூதர்களை அனுப்பிக் கொண்டு திமுக இன்னமும் காத்திருக்கிறது எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
களத்துக்கு வந்த அதிமுக
இந்த கோதாவில் தற்போது அதிமுகவும் இறங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில் கூட்டணிக்கு 'தேர்தல் செலவு'தான் முக்கியமானதாக இருக்கிறது என்பது பேரம் பேசுகிற கட்சிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் தெரிந்த செய்தியாகிவிட்டது.
பணத்துக்கு ஏற்பாடு
அதைப்பற்றியெல்லாம் தேமுதிகவும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தேமுதிகவுக்கு தேவை "தேர்தல் செலவு"க்கான பணம்தானே.. அதை நாமே தரலாம்.. ஆனால் அந்த நடிகரை தனித்து போட்டியிட சொல்ல வேண்டும் என்று அதிமுக மேலிடமும் காய்நகர்த்தலை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் அதிர்ச்சி-ஆச்சர்யம்
இந்த தகவலைக் கேட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தே அதிமுகவின் மூவ் குறித்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தாராம்.
பிரதமர் கனவு
அதிமுகவைப் பொறுத்தவரையில் தேமுதிக தனித்து நின்றால் எப்படியும் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றிவிடலாம்.. அதனால் மத்தியில் அமையும் புதிய அரசில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாகவோ அல்லது ஜெயலலிதாவே பிரதமராகவோ வர முடியும் என்று கருதுகிறது. இதற்காகத்தான் எந்த விலையையும் கொடுக்க அதிமுகவும் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது..