டிவி விவாதங்களில் மல்லுக்கட்டப்போகும் அதிமுகவின் முப்பெரும் தேவியர்
சென்னை: ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என்பது போருக்கு போவது போலத்தான். எதிர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். அதிமுகவில் சி.ஆர். சரஸ்வதி மட்டுமே பெரும்பாலான ஊடக விவாதங்களில் பங்கெடுத்து வந்தார்.
அதிமுகவில் எந்த ஆண்டும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 11 பேரை செய்தி தொடர்பாளர்களாக அறிவித்துள்ள ஜெயலலிதா, அவர்களில் பா.வளர்மதி (கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), சி.ஆர்.சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்), நிர்மலா பெரியசாமி (தலைமைக்கழகப் பேச்சாளர்) ஆகிய மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
ஆழமாக விவாதங்கள் செய்யவேண்டும், கணீரென்று தெளிவாகப் பேசவேண்டும், மக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஈர்க்கும்விதமாக இருக்கவேண்டும், மக்களிடம் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. அந்தவகையில்தான் இந்த மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்களாம்.

சி.ஆர். சரஸ்வதி
எங்க சின்னராசாவின் சித்தியாக அனைவருக்கும் அறிமுகமான இவர், அதிமுகவில் இணைந்து அதிரடியாக பேசி வருகிறது. விவாத நிகழ்ச்சிகள் அதிகம் பிரபலமானவர்.

பல்லாவரத்தில் தோல்வி
சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், ஊடகங்களில் எதிராளியை மடக்கிப்பேசுவது போன்ற காரணங்களால் சி.ஆர்.சரஸ்வதிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாம்.

மாஜி அமைச்சர் வளர்மதி
தடாலடியாகப் பேசுவது, அடாவடியாக விவாதம் சென்றால் அந்தத் தொனியிலேயே பதிலடி கொடுப்பதற்கே முன்னாள் அமைச்சர் வளர்மதி தேர்வு செய்யப்பட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தாலும் கட்சி பொறுப்பு கை விட்டு போகவில்லை.

நிர்மலா பெரியசாமி
வணக்க்க்கம் புகழ்... கூடவே கணீர் குரலால் தமிழக மக்களிடம் அறிமுகமானவர் நிர்மலா பெரியசாமி. ஜீ தமிழ் டிவியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தொலைக்காட்சியில் பிரபலமானார்.

விருப்பமனு
அதிமுகவில் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்த நிர்மலா பெரியசாமி இம்முறை கரூர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட சீட் கேட்டு பணம் கட்டியிருந்தார். ஆனால், இறுதிநேரத்தில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர் கட்சி பிரச்சாரப் பணிகளைத் தொடர்ந்தார். இதற்காகவே இவருக்கு செய்தி தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முப்பெரும் தேவியர்
மூவரும் ஊடகங்களில் இனி அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறுவார்கள். எதிரணியினருடன் நன்றாக மல்லுக்காட்டுவார்கள். இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க இனி எதிர் அணியில் இருந்து யார் யார் வரப்போகிறார்களோ? ஊடக விவாத நிகழ்ச்சிகள் இனி வேடிக்கையாகத்தான் இருக்கும்.












Click it and Unblock the Notifications