அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரன் கட்சியை கட்டி காப்பது போல் பேசுவதா? கேபி முனுசாமி போர்க்கொடி!
அதிமுகவை கட்டி காப்பது போல உரிமை கோரி திவாகரன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திவாகரன் பேச்சு கொதிப்படைய வைத்திருக்கிறது என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பது பேசியிருப்பதற்கு அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திவாகரனின் பேச்சு கொந்தளிக்க வைத்திருப்பதாகவும் கேபி முனுசாமி கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய திவாகரன், அதிமுகவை கட்டி காப்பாற்றி வருவதாக கூறியிருந்தார்.

அவரது பேச்சால் அதிமுக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திவாகரன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரன் கட்சியை கட்டி காப்பது போல பேசியிருப்பது கொதிப்படையச் செய்கிறது. திவாகரனை சசிகலா கட்டுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications