சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே.. அம்மா நாளிதழின் கண்டன கவிதை
அம்மா நாளிதழ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
Recommended Video

சென்னை: "எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே?" என்று, அம்மா நாளிதழ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில அரசும் தன் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால்தானே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அதிமுகவின் நாளிதழான "நமது அம்மா" விலும் மத்திய அரசின் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அந்த கண்டனம் கவிதை நடையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தலைப்பு ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதில் பதிவு செய்யப்பட்ட கண்டன வரிகளானவை:
- கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.
- ஊழல் இல்லை என்கிற அதே வேளையில் மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...
- எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...
- சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...
- அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...
- உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....
- ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...
- இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....
- மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications