ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமில்லாமல் பேசுகிறார்... நாஞ்சி சம்பத் 'பொளேர்'
டிடிவி தினகரனை சந்திக்காத எம்எல்ஏக்களும் அவருக்கே ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே நன்றியை மறந்து நாகரீகமில்லாமல் பேசுவதாக அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் இன்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் என்றுமே தினகரன் உள்ளதாக தெரிவித்தார். தினகரன் இல்லாத கட்சி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
கட்சியும், ஆட்சியும் ஊனமடைந்துவிடக்கூடாத என்பதற்காகவே டிடிவி தினகரன் அமைதியாக இருக்கிறார். கட்சியை ஒருங்கிணைத்து நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை அவர் பெற்றெடுப்பார். டிடிவி தினகரனுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவாக உள்ளனர்.
தினகரனை வந்து சந்தித்த எம்எல்ஏக்கள் மட்டுமல்ல அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுமே டிடிவி. தினகரனுக்குத் தான் உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறார் அதில் தவறு இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே டிடிவி. தினகரனுக்கு எதிரான கருத்துகளை சொல்லி வருகிறார். அவர் நன்றி மறந்து நாகரீகமற்ற முறையில் பேசுகிறார். மற்ற அமைச்சர்களை முன்நிறுத்தி அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறார். கட்சியை சேர்ந்த ஒருவர் கூட சந்திக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் சொன்னார், ஆனால் இப்போது சாரைசாரையாக கட்சியினர் வந்து செல்கின்றனர் இதற்கு ஜெயக்குமார் என்ன சொல்வார்.
எல்லோருமே வந்து தினகரன் சந்திக்கும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று 'பச்சைத் துரோகி' ஓ.பிஎஸ்சும், ஸ்டாலினும் மட்டுமே சொல்லி வருகிறார்கள், அவர்களின் எண்ணம் பலிக்காது. முதல்வரின் பதவியே தனது வாழ்க்கை என்று சிலர் நினைக்கிறார்கள் அவர்களைப் போல அல்ல டிடிவி. தினகரன் கட்சிக்காக பொறுமைகாக்கும் தலைவர். தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு நல்லதல்ல. வீணான பணச்செலவு ஏற்படும். அப்படியே தேர்தல் வந்தாலும் அதில் நிச்சயம் அதிமுக அம்மா அணி தான் வெற்றி பெறும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.