ஜெயலலிதா நலம்பெற தொடரும் பிராத்தனைகள்: அப்பல்லோ முன்பு அதிமுகவினர் தொழுகை
சென்னை: சென்னை: தமிழக முதல்வர் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் பிராத்தனை செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் காலையில் தமிழ்மகன் உசேன் தலைமையில் முதல்வர் நலம் பெற தொழுகை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நாள்தோறும் முதல்வர் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து தகவல் அறிந்து, மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள், கட்சிக்காரர்கள் தினந்தோறும் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவிற்காக தொழுகை
இந்துக்கள் மட்டுமல்லாது கிருஸ்துவ சமூதாயத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகின்றனர். ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அப்போலோ மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏந்தி, நலம்பெற வேண்டி தொழுகை நடத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜைகள்
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டக் கழகம் சார்பில் முத்து மாரியம்மன், சாந்தாரம்மன், புவனேஸ்வரி அம்மன் ஆகிய அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நலம்பெற பிராத்தனை
கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சின்னமுத்தூர் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அதிமுகவினர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி இறைவனை வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியக் கழகம் சார்பில் ஆடுதுறை விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications