மன்னார்குடியில் அடுத்தடுத்து மீட்டிங் போடும் அரசியல் புள்ளிகள்.. மீண்டும் பவர் சென்டர் ஆகிறதா?
மன்னார்குடியில் கூட்டம் நடத்துவதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மன்னார்குடி: மன்னார்குடியில் கூட்டம் நடத்துவதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் அரசியலில் மன்னார்குடி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் இருந்த பவர் சென்டர் தற்போது ப்யூஸ் போய்விட்டது என்று, டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதை சரி செய்ய முன்னாள், இன்னாள் அதிமுக நிர்வாகிகள் போட்டியிட்டு வருகிறார்கள்.
மன்னார்குடியில் தொடர்ந்து அதிமுக சார்பாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் டிடிவி தினகரனும், திவாகரனும் மன்னார்குடியில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

டிடிவி தினகரன் மீட்டிங்
டிடிவி தினகரன் கடந்த மாதம் மன்னார்குடியில் கூட்டம் போட்டார். பல விஷயங்களை மையமாக வைத்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. திவாகரனுடன் முட்டிகொண்ட பின் மன்னார்குடியில் இந்த கூட்டம் முதல்முறையாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் அதிமுக தரப்பிற்கு எதிராக மட்டுமல்லாமல், திவாகரனுக்கு எதிராகவும் பேசினார். அதேபோல் சசிகலா குறித்தும் உருக்கமாக பேசி, பழைய நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்க பார்த்தார்.

ஓ பன்னீர்செல்வம் மீட்டிங்
இந்த நிலையில்தான் சொல்லிவைத்தார் போல் சரியாக ஒரு மாதத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதே மன்னார்குடியில் கூட்டம் போட்டார். கடந்த சனிக்கிழமை மாலை நடந்த இந்த கூட்டத்தின் சிறப்பு, என்னவென்றால் இந்த கூட்டம், தினகரன் போட்ட அதே இடத்தில், அதே முறையில் நடத்தப்பட்டது. அதேபோல் சசிகலா தரப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் கடுமையான விமர்சனங்களை இதில் வைத்தார்.

திவாகரன் அதிர்ச்சி
மன்னார்குடியில் ஒரு காலத்தில் தனி ஆளாக சசிகலா பிரதிநிதியாக வலம் வந்த திவாகரன் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். தன்னுடைய ஊரில் தனக்கு எதிரான இரண்டு பேர் கூட்டம் நடத்திவிட்டார்களே என்ற விரக்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் இன்னும் இரண்டு மாதத்திற்குள் திவாகரன் மன்னார்குடியில் பெரிய கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணம்
இதற்கு பல காரணம் கூறப்படுகிறது, மன்னார்குடியில் அதிமுகவின் மூன்று அணிகளும் மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க பார்க்கிறார்கள். யார் பலத்தை நிரூபிக்கிறார்களோ அவர்களே, அதிமுகவில் ஆதிக்கத்தை நிரூபிக்க முடியும் என்பதால் இப்படி கூட்டத்திற்கு மேல் கூட்டம் நடத்தி வருகிறார்கள். மன்னார்குடியில் ஓ பன்னீர்செல்வம் நடத்திய கூட்டம், அமைச்சர் காமராஜ் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications