சட்டசபை தேர்தல்: அதிமுக- 26.84%, திமுக- 24.03%, தேமுதிக- 7.98% ஆதரவு- ஜூ.வி சர்வே முடிவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு நடத்திய சர்வேயில் அ.தி.மு.க.வுக்கு 26.84%; தி.மு.க.வுக்கு 24.03; தே.மு.தி.க.வுக்கு 7.98% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழ் கடந்த சில வாரங்களாக தமிழக அரசின் செயல்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் செயல்பாடு, தி.மு.க.வில் யார் முதல்வர் வேட்பாளர் என பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்து வருகிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து பலர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் செயல்பாட்டுக்கு வெறும் 10% பேர்தான் பாராட்டு தெரிவித்திருந்தனர். தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர் என பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதேபோல் அ.தி.மு.க.வில் அடுத்த தலைவராக ஓ. பன்னீர்செல்வத்துக்கும் மற்றவர்கள் என்ற கேட்டகரிக்குக்கும் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை என பெரும்பாலானோர் கூறியிருந்தார். இந்நிலையில் ஜெயிப்பது யார்? என ஒரு சர்வேயை "மழை வெள்ள பாதிப்பு காலத்துக்கு முன்னதாக" ஜூ.வி. நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
7 கேள்விகளுடன் 16,846 பேரை 32 மாவட்டங்களில் மழைக்கு முன்னதாக சந்தித்து ஜூ.வி. டீம் நடத்திய சர்வே முடிவுகள் விவரம்:
அ.தி.மு.கவுக்கு 26.84%
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என 26.84% (4,521 பேர்) தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு மதுரை மண்டலத்தில்தான் மிக அதிகபட்சமாக 1,588 பேரும் அடுத்ததாக சென்னை மண்டலத்தில் 1,418 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிற கொங்கு மண்டலத்தில் வெறும் 550 பேர்தான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2வது இடத்தில் தி.மு.க.
தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என 24.03% (4,084 பேர்) ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தி.மு.க.வுக்கு சென்னை மண்டலத்தில் 1,339 பேரும் அடுத்ததாக மதுரை மண்டலத்தில் 1,372 பேரும் திருச்சியில் 842 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவை மண்டலத்தில் 495 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
மற்றவர்களுக்கு 21.90%
ஜூ.வியின் இந்த சர்வேயில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு அடுத்ததாக மற்றவர்கள் என்ற கேட்டகிரிக்குத்தான் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 21.90% ஆதரவு இதற்கு கிடைத்துள்ளது. அதாவது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக் கூடிய வாக்காளர்கள்தான் இந்த மற்றவர்கள் கேட்டகிரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுவும் மழைவெள்ள பாதிப்பு காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட சர்வேயில் இத்தனை சதவீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்படியானால் மழைவெள்ளத்துக்கு பிந்தைய சர்வேயில் இதில் நிறையவே மாற்றம் ஏற்படக் கூடும்.
4வது இடத்தில் தே.மு.தி.க.
தே.மு.தி.க.வுக்கு 7.98% பேர் (1,344 பேர்) ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளனர். இக்கட்சிக்கு சென்னை மண்டலத்தில் 450 பேர், மதுரை மண்டலத்தில் 384 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு 6.33%
பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்போம் என 6.33% அதாவது 1,067 பேர் ஆதரவு அளித்துள்ளனர். மதுரை மண்டலத்தில் பா.ஜ.க.வுக்கு 511 பேரும் சென்னை மண்டலத்தில் 220 பேரும் ஆதரவு தந்துள்ளனர்,
6 வது இடத்தில் வைகோ கூட்டணி
வைகோ தலைமையிலான மக்கள் நலன் கூட்டணிக்கு 5.21% (877 பேர்) ஆதரவு கிடைத்துள்ளது. சென்னை மண்டலத்தில்தான் அதிக அளவாக இக்கூட்டணிக்கு 301 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பா.ம.கவுக்கு 4.81%
சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 4.81% (811 பேர் ) ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருக்கின்றனர். வடமாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மிக அதிகபட்சமாக 405 பேர் இக்கட்சியை ஆதரித்துள்ளனர்.
காங்கிரஸ்
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2.90% அதாவது 488 பேர்தான் ஆதரவு தந்துள்ளனர். அதுவும் சென்னை மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 171 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
ஜூ.வியின் கூட்டணி ஆரூடம்
மேலும் "தே.மு.தி.க., அ.தி.மு.க அணிக்குப் போவதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. தனித்துப் போட்டியிடலாம் அல்லது பி.ஜே.பி அணியிலோ, மக்கள் நலக் கூட்டணியிலோ, தி.மு.க கூட்டணியிலோ தே.மு.தி.க இடம்பெறலாம்.
- தி.மு.க கூட்டணியில் இணைந்தால் அ.தி.மு.க-வைவிட அந்த அணி பலம் பொருந்திய அணியாக மாறிவிடும்.
- தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டாலோ, பி.ஜே.பி அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தாலோ அ.தி.மு.க-வின் வெற்றி இன்னும் சுலபமாகிவிடும்.
- அதே சமயம் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., காங்கிரஸ் ஆகியன மொத்தமாகச் சேர்ந்து 20 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. இதை வைத்துப் பார்த்தால் இந்த அணி தி.மு.க., அ.தி.மு.க-வுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கலாம்
என்றும் ஜூ.வி. பதிவு செய்துள்ளது.