5 வருஷம் இல்ல... 50 வருஷம் இல்ல 100 வருஷம் அதிமுகதான் தமிழகத்தை ஆளும்.... சொல்வது செங்கோட்டையன்
100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: 5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகள் மட்டுமல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை அதிமுகதான் ஆளும்... இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் அடித்துக் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி 50 நாள் நீடிக்குமா? 100 நாட்கள் தாண்டுமா என்று எதிர்கட்சியினர் பெட் கட்டி வருகின்றனர். அதிமுக ஆட்சி தானாகவே கவிழும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள செங்கோட்டையன், தற்போது நடைபெறும் ஆட்சி கவிழும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
மன உளைச்சல் குறைந்தது
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் டூ தேர்வில் மாணவர்கள் மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக ரேங்க் பட்டியலை மாற்றி கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் கார்டு
இதனால் பெற்றோர் மாணவரை திட்டுவதும் அதனால் ஏற்படும் மனநிலையும் மாறி உள்ளது.எஸ்.எம்.எஸ்.மூலம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 646 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வரும் பள்ளி கல்வி மானிய கோரிக்கையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
பாடத்திட்டம் மாறும்
கல்வியில் புதிய புரட்சியாக தமிழில் மதிப்பெண் சான்றிதழ், 11ஆம் வகுப்பு தேர்வை பொது தேர்வாக நடத்த பரிசீலனை நடந்து வருகிறது. தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த புதிய பாடத்திட்டம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு உள்பட தேர்வுகளை எளிதில் சந்திக்க முடியும். 6ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் மூலம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது.
சுயவிளம்பரம்
ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு அதன் அடிப்படையில் சுய விளம்பரத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்களை கூறுவது ஏற்புடையது அல்ல. அரசு கவிழும் என்று யார் கூறி வந்தாலும் அந்த கனவு பலிக்காது அது ஒருபோதும் நடைபெறாது.
செஞ்சுரி அடிக்கும்
தமிழகத்தில் 50 ஆண்டுகள் மட்டுமல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். என்னா ஒரு நம்பிக்கை!