ஸ்ரீரங்கத்தில் அதிமுகவுக்கே வெற்றி: பிற கட்சிகள் டெபாசிட் இழக்கும்- சரத்குமார்
கோவை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழர்களின் பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டை நடத்த அதிமுக அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சில் நியாயம் இல்லை. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் திமுக தவறான கருத்தை பரப்பி வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷிடம் கூறி ஜல்லிக்கட்டை நடத்த வைத்திருக்கலாமே? அதை எல்லாம் செய்யாமல் தற்போது அதிமுக அரசை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி விரும்புகிறது. ஜல்லிக்கட்டு மேலைநாடுகளில் இருந்து வந்தது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி சமத்துவ மக்கள் கட்சி போராடும். அதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். மக்களின் முதல்வர் அம்மாவின் 3 ஆண்டு கால ஆட்சியில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதனால் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்.
அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஆலோசனைப்படி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ச.ம.க. பிரச்சராம் செய்யும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வருமானம் ஈட்டும் மதுக்கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசுக்கு கடினமான ஒன்று.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகளை திறந்து வைக்கலாம். மது அருந்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதை அறிந்து மக்களே மதுவுக்கு விடை தர வேண்டும் என்றார்.