இன்னிக்கு அநாகரீகமாக பேசுனா நாளைக்கு அவன் ஜெயில்ல இருக்கனும்.. வெள்ளைத்துரை அதிரடி பேச்சு
சென்னை: போலீஸ் பத்தி தப்பா பேசுறவங்களை அரெஸ்ட் பண்ணி உள்ளே தள்ளுங்க. இன்னிக்கு காலையிலே அநாகரீகமா பேசுனா நாளைக்கு காலையிலே அவன் ஜெயில்ல இருக்கனும் என்று ஓபன் மைக்கில் போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் டிஎஸ்பி வெள்ளைத்துரை பேசியிருப்பது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பன் மைக்கில் இவர் சக காவல்துறையினருக்கு பிறப்பித்த உத்தரவுதான் இப்போது வாட்ஸ் அப்பில் வைரலாக உலா வந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஏடிஎஸ்பியாக இருப்பவர் வெள்ளத்துரை. வீரப்பன் என்கவுன்ட்டருக்கு பிறகு பிரபலமாக பேசப்பட்டவர். இந்நிலையில், காவல்துறையினரை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெள்ளத்துரை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் ஓப்பன் மைக்கில் பேசியுள்ளார். இது வாட்ஸ் அப்பில் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
"காவல்துறையை பற்றி யார் அநாகரீகமாக பேசினாலும் உள்ளே தள்ளு... இன்னைக்கு காலையில பத்து மணிக்கு பேசினா நாளை காலை பத்து மணிக்கு அவன் ஜெயில்ல இருக்கணும்...!' என்ற ரீதியில் போகிறது வெள்ளத்துரை பேச்சு!
சார்ட்ஹேண்ட் ரிப்போர்ட்டர் இருக்கணும். அப்படியே ரிப்போர்ட் பண்ணணும்... வீடியோ எடுக்கணும். இரண்டையும் கொண்டு போய் ஏபிபி (அரசு உதவி வழக்கறிஞர்) கிட்ட கன்சல்ட் பண்ணணும். கன்சல்ட் பண்ணிட்டு, என்ன செக்ஷன் வருதோ, அப்படியே யாராக இருந்தாலும் எப்ஐஆர் போடணும். இன்னைக்கு காலை 10 மணிக்கு பேசிட்டுப் போனா, நாளைக்கு காலைல 10 மணிக்கு அவன் ஜெயில்ல இருக்கணும். தெளிவாக தெரிஞ்சுக்குங்க....போலீஸ் அவங்க வீட்டு வேலைய பார்க்கல.. பொதுவான வேலையை பார்க்கிறாங்க... அவுங்க தப்பு பண்ணினாங்கனா...அரஸ்ட் பண்ணி ரிமாண்ட் பண்ணிருக்கிறோம்..
அதில் எந்த டவுட்டும் இல்லை... ஆனா தெளிவாக தெரிஞ்சுக்குங்க... போலீசை பற்றி அநாகரீகமான முறையில் பேசுனா அப்படியே ரெக்கார்டு பண்ணிருக்கணும். வீடியோ பண்ணிருக்கணும். சார்ட்ஹேண்ட் எடுத்திருக்கணும். ஏபிபி யிடம் ஒப்பீனியன் வாங்கணும். எப்ஐஆர் போட்டு ரிமாண்ட் பண்ணி காலையில ஜெயில்ல இருக்கணும்.
நாட் ஒன்லி கம்யூனிஸ்ட் பார்ட்டி... யாராக இருந்தாலும் சரி.. நாகரீகத்தைத் தவறி போலீசைப்பத்தி பேசினா ரிமாண்டில் இருக்கணும். அதை பாலோ பண்ணிக்கச் சொல்லுங்க.. எல்லா சப் டிவிஷன் ஆபீசரும் பாலோ பண்ணி அலார்ட்டா இருக்கணும்.. அடிச்சா நெத்தியடியா இருக்கணும்.. அதுக்குப்பிறகு போலீசைப்பத்தி வாயைத் திறக்கக்கூடாத அளவிற்கு இருக்கணும்.. பார்த்துக்குங்க...' என்று அவர் பேசியுள்ளார்.