வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை தடை செய்ய ஹைகோர்ட்டில் வழக்கு
வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் என்ற சர்ச்சைக்குரிய கட்டுரை இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் தினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது வெளிநாட்டவர் கூறிய தற்போது நடைமுறையில் தவறான அர்த்தத்தை கற்பிக்கும் வார்த்தையால் ஆண்டாளை பாராட்டியுள்ளார்.
இதற்கு இந்து அமைப்புகள் கொந்தளித்தன. பெரும்பாலான இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அந்த கட்டுரையை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நாளிதழும் பிரசுரம் செய்துள்ளது.
இந்நிலையில் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய கட்டுரையான தமிழை ஆண்டாளை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் பெண் தெய்வமான ஆண்டாளை வேண்டுமென்றே அவதூறான வகையில் புனிதத் தன்மையை கெடுக்கும் வகையில் வைரமுத்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புகார் அளிக்கப்பட்டு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சர்ச்சைக்குரிய கட்டுரை இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் கிடைப்பதை தடை செய்ய தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மாற்று மதக் கடவுள் குறித்து அவதூறாக பேசியதால் அவரையும் இந்த வழக்கில் பதில் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.