அரைநிர்வாணப்படுத்தி அடிச்சாங்கனு சொல்லணும்.. ராணுவ வீரருடன் போனில் பேசியவரை தட்டித் தூக்கிய போலீஸ்!
வேலூர்: ஆரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவி அரைநிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில், தனது நண்பருடன் பேசிய ஆடியோவால் அது நாடகம் என தெரியவந்தது. இந்நிலையில், பிரபாகரனுடன் போனில் பேசிய வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் அண்மையில் சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நிலப் பிரச்சனை தொடர்பாக தனது மனைவியை 20க்கும் மேற்பட்டவர்கள் அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாக கண்ணீரோடு புகார் தெரிவித்தார்.
மேலும் தனது மனைவியை காப்பாற்றுமாறு திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பிக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ராணுவ வீரரின் மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது ராணுவ வீரர் பிரகரனின் மனைவியான கீர்த்தியின் தந்தை செல்வராஜ் அந்த பகுதியில் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். அந்த கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளர் ராமு பல முறை கூறியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி சம்பவமும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் தனது நண்பர் வினோத்திடம் பேசிய ஆடியோ ஒன்று அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறங்கி வேலை செஞ்சிருக்கேன், தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் ஆக போகுது. இந்த பிரச்சனையை நாடு முழுவதும் பெரிது படுத்திவிட்டேன். விசாரணையின் போது அரை நிர்வாணம் செய்து அடித்தார்கள் எனச் சொல்ல வேண்டும் என பக்காவாக தனது ஸ்கெட்ச்சை வினோத்திடம் கூறியுள்ளார் பிரபாகரன்.
அந்த உரையாடலில், என் தங்கச்சிய அடிச்சா நான் வேடிக்கை பார்ப்பேனா என்று கேள். என் தங்கச்சியை அடித்தவர்களை அடித்தேன் என்று சொல், கத்தியால் குத்தியதைச் சொல்ல வேண்டாம். 20 பேரையாவது ரெடியா வைச்சிரு என வினோத்துக்கு அறிவ்றுத்தினார் பிரபாகரன்.
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன், அவருடைய மனைவி கீர்த்தி மற்றும் மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோருடன் சதி திட்டம் தீட்டியதாக செல்போனில் பேசிய வினோத் உள்ளிட்டோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ வீரருடன் செல்போனில் சதி திட்டம் தீட்டிய வழக்கில், பிரபாகாரனுடன் போனில் உரையாடிய வினோத்தை சந்தவாசல் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications