எல்லோரது அடையாளத்தையும் அழித்த அதிமுக.. இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கும் பரிதாபம்!
சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடையாது. இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். இப்படித்தான் முந்தைய இரு தேர்தல்களில் அதிமுக திட்டவட்டமாக கூறி வந்தது. இன்று அதுவே தனது சின்னத்தையும், பெயரையும் இழந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
தனது கட்சியோடு கூட்டு சேர முயன்ற, விரும்பிய கட்சிகளின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களது சிறிய ஆசைகளைக் கூட மதிக்காமல், எங்க சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், நாங்க சொல்லும் இடத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அதிரடியாக கூறி வந்தவர் ஜெயலலிதா.
இன்று அவரது மறைவுக்குப் பின்னர் அவரது கட்சியே அடையாளம் இல்லாமல் போயிருக்கிறது. சின்னத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக நிற்கிறது.

அடாவடி அரசியல்
அதிமுக கடந்த காலங்களில் செய்த அரசியலை அடாவடி அரசியல் ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். குறிப்பாக ஜெயலலிதா காலத்தில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டு அவர் எடுத்த முடிவுகள் சர்வாதிகாரம்தான்.

தனி சின்னம் கிடையாது
கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடையாது. அதிமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதா தரப்பில் போடப்பட்ட முதல் நிபந்தனையாக இருந்தது. அது யாராக இருந்தாலும் சரி, இரட்டை இலையில்தான் போட்டியிட வேண்டும்.

ஜி.கே.வாசன் பட்ட அவமானம்
இந்த அவமானத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஜி.கே.வாசன்தான். அவரது கட்சியே கலகலத்துப் போகும் அளவுக்கு கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அவமானத்தைச் சந்தித்தார் வாசன்.

சீட் தர்றோம்.. ஆனால் இலைதான்
ஜி.கே.வாசனை ஆரம்பத்தில் அதிமுக கண்டு கொள்ளவில்லை. பின்னர் சற்றே இறங்கி வந்து 8 சீட் தர்றோம். அதிமுக சின்னத்தில்தான் போட்டியிட தயாரா என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சியானார் வாசன். எவ்வளவோ பேசிப் பார்த்தும் கடைசி வரை அதிமுக இறங்கவில்லை. அதிகபட்சம் 15 சீட் வரை தருவதாக கூறிய அவர்கள் சின்னம் மட்டும் இலைதான் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.

தென்னந்தோப்புக்குள் பதுங்கிய வாசன்
இதனால் வேறு வழியின்றி கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் அடைக்கலம் புகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் வாசன். அவருக்கு தென்னந்தோப்பு சின்னம் கிடைத்தது. கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.

6 கூட்டணிக் கட்சிகள்
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஆறு குட்டிக் கட்சிகள்தான். மனிதநேய ஜனநாயகக் கட்சி (2), இந்திய குடியரசுக் கட்சி (1), சமத்துவ மக்கள் கட்சி (1), தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (1), தமிழ் மாநில முஸ்லீம் லீக் (1), முக்குலத்தோர் புலிப்படை (1) ஆகியவையே அவை. அத்தனை பேரும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டனர்.

தன் சின்னம் போச்சே
அத்தனை கட்சிகளின் சின்னக் கனவையும் தகர்த்து நசுக்கிய அதிமுக இன்று தன் சின்னத்தைப் பறி கொடுத்து விட்டு அத்தனை பேர் முன்பும் நிர்வாணமாகி நிற்கிறது.












Click it and Unblock the Notifications