சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவிட வேண்டும்... சீமான் வலியுறுத்தல்!
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினா கடற்கரையில் நிறுவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினா கடற்கரையில் நிறுவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதை வலியுறுத்தி நேற்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த சீமான் கூறுகையில், " தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் சிலையை மீண்டும் மெரினா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும்.
இதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இங்கே நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களின் கலைப் பெருமையாக உள்ளவர் சிவாஜி கணேசன். அவர் சிலையாக கூடத் தமிழ் மண்ணில் நிற்கத் தகுதி இல்லையா?
அதிமுக திமுக தலைவர்களின் சமாதி அதே மெரினா கடற்கரையில்தான் உள்ளன. அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் தினமும் அங்கே திரள்கிறார்கள். அதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படவில்லையா?
அதனால் திட்டமிட்ட அநீதி, எங்கள் மீது இழைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் பார்க்கிறோம். அதனால்தான் எடுக்கப்பட்ட சிலையை மீண்டும் அங்கேயே வையுங்கள், மண்டபத்தில் வேறு சிலையை நிறுவுங்கள் என்று கேட்கிறோம்" என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே.ராஜன், இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றப் பெருமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.