"கோழி மிதித்து குஞ்சு சாகுமா?"... அழகிரி ஆதரவாளரின் புதிய போஸ்டர்!!
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுகவே கலைக்கப்பட்டது.. 5 முக்கிய பிரமுகர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் அழகிரி ஆதரவாளர்களின் திமுக தலைமையை விமர்சிக்கும் போஸ்டர் யுத்தம் தொடரத்தான் செய்கிறது..
மதுரையில் திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அசத்தலான வசனங்களுடன் ஒட்டும் போஸ்டர்கள்தான் அக்கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலான போஸ்டர்களை விதம் விதமாக ஒட்டப் போய் விஸ்வரூபமானது.

இதன் உச்சமாக மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டன. ஆனாலும் "டோன்ட் வொர்ரி" என்ற தலைப்பில் புது போஸ்டர்களை அடித்து அடுத்த குடைச்சலைக் கொடுத்தனர். இந்த போஸ்டரை அடித்த கவுன்சிலர் முபாரக் மந்திரி உட்பட அழகிரியின் 5 ஆதரவாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுக்கு, புதிய போஸ்டர்கள் அடித்து சிக்கலை உருவாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுக தலைமையின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் மற்றொரு போஸ்டரை மதுரை 83வது வார்டு கவுன்சிலர் மாணிக்கம் ஒட்டியிருக்கிறார். அவர் " அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" என்று அடித்திருக்கும் போஸ்டரின் தலைப்பு "கோழி மிதித்து குஞ்சு சாகுமா?" , இதில் வழக்கம் போல அழகிரி படம் இடம்பெறவில்லை. கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அத்துடன் தாய்க்கோழி தமது குஞ்சுகளை அடைகாக்கும் புகைப்படம் ஒன்றும் அழகாக அச்சிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கொந்தளிப்பில் இருக்கும் திமுக தலைமையை மேலும் சீண்டுவது போல் இந்த போஸ்டர் இருப்பதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அடித்து ஒட்டவேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு மு.க. அழகிரி உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications