கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் அனைத்துக் கடனும் தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.
கடன் தள்ளுபடி ஆணை
5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய கடந்த 2016-இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அய்யாக்கண்ணு மேல்முறையீடு
இதை எதிர்த்து தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். அதில் சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இன்று விசாரணை
அந்த வழக்கானது மதுரை கிளையில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களை, அதாவது 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த தீர்ப்புக்கு அய்யாக்கண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார். டெல்லி போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யாக்கண்ணுவைத் தூக்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் தேசிய வங்கிகளிலும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.