மகளிர் தினக் கொண்டாட்டம்: தனியே பறந்து திறமையை நிரூபித்த ஏர்- இந்தியா பெண்கள்...
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து மறுமார்க்கமாக சென்னைக்கும் ஏர்-இந்திய விமானத்தை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர்.
நேற்று கொண்டாடப் பட்ட சர்வதேச மகளிர் தினத்தில் தனது பெண் ஊழியர்களைக் கவுரவிக்கும் வகையில் பெண்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை இயக்க வைக்க ஏர்-இந்தியா முடிவு செய்தது. அதன்படி, நேற்று சென்னை, மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல இருந்த ஏர்-இந்தியா விமானத்தை இயக்க பெண் ஊழியர்களை மட்டுமே நியமித்தது.
அதன்படி, வெற்றிகரமாக சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கும் வெற்றிகரமாக பறந்து தங்களது தனித்திறமையை நிரூபித்தார்கள் ஏர்-இந்தியா பெண் ஊழியர்கள்.

பெண்கள் குழு....
இதற்காக விமானி தீபா தலைமையில் உதவி விமானி, பணிப்பெண்கள் கொண்ட பெண்கள் குழுவே இந்த விமானத்தை இயக்கியது.

85 பேர் கொண்ட குழு...
இந்த விமானத்தில் மொத்தம் 85 பேர் பயணம் செய்தனர். பின்னர் இந்த விமானம் அதே குழுவுடன் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு திரும்பியது.

மேலும் பிற விமானங்கள்...
இதேபோல், டெல்லி. மும்பை, பெங்களூர் மார்க்கத்தில் சில விமானங்களையும் பெண்களே இயக்கினர்.

மருத்துவ சோதனை....
விமானி மற்றும் பணிப்பெண்களை பெண் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்த விமானத்தில் உடைமைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் பெண் அதிகாரிகள் செய்தனர்.

வாழ்த்துக்கள்...
விமானத்தை இயக்கிய விமானி, உதவி விமானி, பணிப்பெண்கள், பெண் அதிகாரிகள் ஆகியோருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications